மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அகற்றக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற அரசுக்கு உத்தரவு
மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக உள்ள கடைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு, உச்சநீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்


மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக உள்ள கடைகளை அகற்றக் கோரிய மனுவுக்கு, உச்சநீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக புதிய வழிமுறைகளை உருவாக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக சேவகர் டிராபிக் ராமசாமி மற்றும் காந்திஜி நுகர்வோர் அமைப்பின் தலைவர் கே.பாலாஜி ஆகிய இருவரும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: சென்னை மெரினா கடற்கரையை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, இதர மாநிலத்தில் உள்ளவர்களும் பார்வையிட வருகிறார்கள்.
கடற்கரைப் பகுதியில் 100 கடைகளுக்கு மேலும், நடைபாதை வியாபாரிகளும் வியாபாரம் செய்கின்றனர். இதனால், கடற்கரையில் கட்டுப்படுத்த முடியாது அளவுக்கு குப்பை சேர்கிறது. சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. சுகாதாரமின்றி மெரினா கடற்கரை காட்சியளிக்கிறது. எனவே, மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் வெள்ளிக்கிழமை (ஜன.10) பிறப்பித்த உத்தரவு: மெரினா கடற்கரை வழக்கு தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி விரிவான பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில், மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் தொடர்பாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை ஒழுங்குபடுத்துவதற்காக திட்டம் தயார் செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கடற்கரையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். வணிக ரீதியான நடவடிக்கைகளை கண்டிப்பாக தடை செய்ய வேண்டுóம். அதனால், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அங்கிருந்து அகற்றிவிட்டு, அவர்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வாதாடியுள்ளார்.
பொது இடங்களில் உள்ள கடைகளை அகற்றுவது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. நகர தெரு வியாபாரிகளுக்காக உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கை 2009-ன் படி, நகர விற்பனை குழு உருவாக்கப்பட்டது. இந்த கொள்கை படி உச்சநீதிமன்றத்தில் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாடு முழுவதும் தற்போது உள்ள தெரு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபரிகளுக்கென தனி பகுதியை உருவாக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற வழிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது புதிய வழிமுறைகளை உருவாக்க முடியாது. உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிமுறைகளை மாநில அரசு பின்பற்ற வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...